Tuesday 22 January 2013

மக்கள் பங்களிப்புடனான கிராம பகுப்பாய்வு- மாகாளித் தொட்டி கிராமம் பற்றிய ஓர் ஆய்வு. (Participatory Rural Appraisal on Mahali thoddi Village)

பொதுவாகவே மலைப் பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான இருப்பிடங்களை அமைத்துக் கொள்ளும் போது அது இயற்கையின் சீற்றத்தில் இருந்தும், வன விலங்குகளின் ஆபத்தில் இருந்தும், தமது விவசாய மற்றும் சிறுவன மகசூல் செய்வதற்கு ஏற்ற விதத்திலும் அமைத்துக் கொள்கின்றனர் என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துச் சொல்வதாக அமைந்திருந்தது மாகாளித் தொட்டிக் கிராமம்.
மாகாளித்தொட்டி கிராமம்
ஊராளி என்ற பழங்குடி இனத்தவர்களையும், லிங்காயத்து மக்கள் என்று அழைக்கப்படும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கன்னட தேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களும் அங்கு சரி அளவாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இந்த இன மக்களது வாழ்வியலைப் பற்றிய தெரிதலுக்காகவும். அந்த கிராம குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான பணியில் ஈடுபட்டுவரும் ஸ்கில்ஸ் இந்தியா (SKILLS INDIA) தனது களம் பற்றிய ஆய்வுக்காகவும்- மக்கள் பங்களிப்புடன் கூடிய கிராம ஆய்வு (PRA)நடவடிக்கையில் ஈடுபட்டது

மக்களின் வரலாறு:

ஊராளி இனமக்கள் தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பல பழங்குடியின மக்கள் வாழும் இடங்களில் வசித்து வருகின்றனர்,குன்றி, மாக்கம்பாளையம், தாளவாடியின் கிராமங்களில் சில, ஆனமலை என பல்வேறு மலைப் பகுதிகளைக் குறிப்பிட்டனர், இவர்கள் எல்லோரும் அவர்களது திருவிழாக் காலங்களிலும் அவர்கள் திருமணச் சடங்குகளிலும் சந்தித்துக் கொள்கின்றனர், காடுகளில் உள்ள பொருட்களை எடுத்து வந்து அதை வைத்து வாழ்வாதாரத்தை போக்கி வந்த இவர்கள் பிற்காலத்தில் பருவகால விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றிலும் ஈடுபட ஆரம்பித்தனர் இப்போது காடுகளில் சிறுவனமக்சூல் செய்யும் பேர் அளவிற்கு கால்நடைவளர்ப்பு மற்றும், பருவகால பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈடு படுகின்றனர். இவர்கள் இந்த பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதைப் போன்றே லிங்காயத்து இன மக்களும் பயிர்ச்செய்கை, மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களது பூர்வீகம் முந்தைய கன்னட தேசமாக இருந்ததாக சொல்கின்றனர் இவர்களது குல தெய்வங்கூட கர்நாடகாவில் அமைந்திருக்கின்றது, இந்த இன மக்கள் அசைவம் உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருக்க வில்லை இது இவர்கள் மரபுவழியாக கடைப்பிடித்துவரும் பழக்கமாகும். இவர்கள் தங்கள் வரலாறு பற்றிக் கூறும் போது முகாலயர்களின் படையெடுப்பின் போது தங்கள் இன பெண்களை முகலைய வீரர்களும் , மன்னர்களும் திருமணம் முடிக்க கேட்டதாகவும் அதன்போது அவர்கள் சொந்த தேசத்தை விட்டு அவர்கள் வரமுடியாத காட்டு பகுதியில் குடியேறியதாக தாத்தா வழி மரபில் கூறியதாக தெரிவித்தனர்..


இரு இன மக்களின் ஜடையசுவாமி திருவிழாவில் சாமி ஊர்வலம்
        இரு இன மக்களின் முக்கியமான தலைவர்கள் மற்றும் பெண்கள், விவசாயிகள், காட்டு வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் அந்த ஊரின் வயதானவர்கள் என பலதரப்பட்ட வைகையினரைக் கொண்டதாக ஒரு ஆய்வுக் களம் தயாரானது. 

கிராமத்தை சுற்றிப் பார்த்தல்-(Transect walk):

இந்த ஆய்வு நடவடிக்கையில் சென்னை சைதை துரைசாமி அக்கடமியில் பொதுத்தேர்வு பயின்றுவரும் திரு. மகேஸ்கார்த்திக் , மதுரையில் சுற்றுச்சூழல் இயக்கத்தில் பணிபுரியும் திரு. பெருமாள் ,மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் சமூகப்பணி மாணவன் திரு. முகமட் அஸ்லம் ஆகியரோடு Skills India வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சிறிதரன் அவர்களும் கலந்து கொண்டார். இரு நாட்கள் இடம் பெற்ற இந்த ஆய்வு நடவடிக்கையின் முதல் நாள் நிகழ்வாக அந்த ஊர்பற்றிய அறிதலைப் பெறுவதற்காக கிராமத்தினைச் சுற்றிப் பார்க்க புறப்பட்டோம். (Transect walk)
கிராமத்து நடுநிலைப் பள்ளி

 கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றுக் சிறுவர்கள் சூழ அந்த கிராமத்தின் எழில் மிகுந்த பகுதிகளையும் கிராமத்தின் மக்கள் வாழ்க்கைத் தரத்தையும் அவர்களது வாழ்வாதாரத்தையும்,கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகள் போன்றவற்றை தெள்ளத்தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டின, அதுபோலவே அரசினால் இம் மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிருக்கும் சேவைகள் போன்றவையும் கண்களுக்கு தெரிந்தன..எம்மோடு வந்த பெரியவ்ர்களும் சிறுவர்களும் தம் பங்கிற்கு அந்த கிராமம் பற்றிய செய்திகளையும் அந்த ஊருக்கு மின்சாரம், பள்ளிக்கூடம், தண்ணீர் தொட்டி வந்த காலங்களையும் சொல்லிக் கொண்டு வந்தனர். அழகான இயற்கை எழில் சூழ்ந்த வாழ்வியலை அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

முக்கியஸ்தர்களுடனான கலந்தாய்வு (Focused Group Discussion ):

தமது வாழ்வியல் பற்றி விளக்கும் பழங்குடியின
 மக்கள் தலைவர் மாதன் 
அதன் பின்னராக இரு இன மக்களின் முக்கியஸ்தர்கள் மற்றும் முதியவர்களுடனான கலந்தாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த கலந்தாய்வு அவர்களது தற்போதைய நிலையினை எடுத்துச் சொல்வதாகவும் அவர்களது வாழ்க்கை முறையை கூறியதாகவும் அமைந்தது . அதில் குறிப்பாக பேச வந்த சில முதியவர்களில்(சின்னையன்,கண்டயா) இருவர் 100 வயதைத் தாண்டியவர்கள் என்பதில் ஆச்சரியம்.. அதற்கான காரணம் அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களும் அவர்களது உணவு முறையுமே என கூறினர். ஆனால் அந்த உணவுப் பழக்கவழக்கங்களில் இருந்து தற்போதைய இளைய தலைமுறை விடுபட்டு ரேசன் அரிசிச் சோறு உணவாக உட்கொண்டு வருகின்றனர். இது அவர்களின் இப்போதைய இளந்தலைமுறைக்கு நோய்கள் விரைவில் தொற்றிக் கொள்ளக் காரணமாக இருப்பதாக இளந்தலமுறையினர் ஏற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக தனது அப்பா ஏறும் மரத்தில் தன்னால் ஏறமுடியவில்லை என்று கூறினார் . இப்போது பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவினை பள்ளி மாணவர்களும், வீட்டில் ரேசன் அரிசிச் சோறும் முதியவர்கள் ராகி களி என உணவாக உட்கொண்டு வருகின்றனர்.


பழங்குடியின மக்கள் தலைவர், லிங்காயத்து
 மக்கள் தலைவருடன் அவர்கள் வாழ்வியல் பற்றி
இவர்களுடனான கலந்தாய்வில் வெளிவந்த மற்றுமொரு முக்கியமான விடையம் இவர்கள் தமது பிள்ளைகளுக்கு இளவயதில் திருமணம் செய்து வைப்பதுதான். குறிப்பாக பெண்களின் திருமண வயது 13 வயதை  தாண்டியதில்லை, ஆண்களின் திருமண வயது 17 ஆக இருக்கின்றது. பெரும்பாலும் பெண்கள் இங்குள்ள பள்ளியில் 8வது படித்து முடித்த பின் மேற்படிப்பினை மேற்கொள்ள வெளியூர் செல்வதில்லை இதனாலேயே இவர்கள் திருமணம் செய்யும் நிலைக்கு ஆளாகின்றனர். ஆண்களும் 8வது படித்த பின்னரான தோட்ட வேலை, மாடு கன்றுகளைப் பார்த்துக் கொள்வது, காட்டுக்கு செல்வது என்ற தொழிலில் ஈடுபட ஆரம்பித்து 4,5 வருடங்களில் திருமணம் செய்து வைக்கப் படுகின்றார்கள்.
ஊரின் வாழ்வாதாரங்கள் பற்றி பெருமாளிடம் விளக்கும் ஊர் பெரியவர்கள்

 எனவே பள்ளிப் படிப்பு தொடர்ந்து இல்லாமைதான் இவர்களது குழந்தைத் திருமணத்துக்கு காரணமாக அமைகின்றது. இருந்த போதிலும் சில மாணவர்கள் மேற்படிப்புக்காக சத்தியமங்கலம் போன்ற இடங்களுக்குச் சென்றாலும் அவர்களால் நீடித்து இருந்து கல்வி கற்க முடிவதில்லை, பொதுவாக இங்குள்ளவர்களால் நகரவாழ்க்கைக்கு ஒத்திசைவாக வாழ முடியாமையும் பெண்பிள்ளைகளை வெளியிடங்களில் தங்கவைத்து படிப்பிற்பதற்கு இவர்களது பெற்றோர் சம்மதிப்பதில்லை. சரி அவர்கள் திருமண வயதை அடையும்வரை அவ்ர்களை வைத்திருப்பதற்கு ஏன் தயக்கம் காட்டுகின்றனர் என்பதற்கு நடராஜ் என்பவர் விளக்கம் அளித்தார். இவர்கள் 13 வயதை அடைந்த பின்னரும் திருமணம் செய்து வைக்காமல் வீட்டிலையே வைத்திருந்தால் கேட்டுவரும் மாப்பிள்ளைகள் இந்த பெண் ஏதோ தவறு செய்திருக்கிறாள் அதனால்தான் இன்னும் திருமணம் ஆகவில்லை என எண்ணிவிடுவார்கள் என்ற பயம் பெற்றவர்கள் மனதில் இருப்பதுதான் என்றார்.

விவசாயிகளுடன் கலந்தாயும் அஸ்லம் மற்றும்
 மகேஸ்
இந்த நிலை ஓரளவேனும் குறைய வேண்டுமென்றால் 150க்கு மேல் மாணவர்கள் கல்விபயிலும் இந்த நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாற்றமடைவதில்தான் இருக்கின்றது என கூறுகின்றனர். இதன் மூலம் இங்குள்ள மாணவர்கள் ஒரு பொது தேர்வாவது எழுதும் நிலை ஏற்படும் என்று  கூறினார் முன்னால் மக்கள் நலப் பணியாளர் கிரியப்பா அவர்கள். சாதாரன கிராம பள்ளிகளில் உள்ளதைக்காட்டிலும் அதிகளவு மாணவர்கள் கல்வி பயிலும் இந்த பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதிலையே இந்த மாணவர்கள் எதிர்காலம் செளிப்படைவது தங்கியிருக்கின்றது. 

குழந்தைகள் கனவு மரம்: Vision Tree map

கனவு மரத்தை ஆர்வமுடன் வரையும்
குழந்தைகள்
முக்கிய நபர்களுடனான கலந்தாய்வினை முடித்து மறுநாள் காலை மாணவர்கள், குழந்தைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தங்கள் கிராமம் பற்றியும் , தங்களது எதிர்காலம் பற்றியும் இருக்கும் கனவுகளை ஒரு மரத்தில் உள்ள பழங்களைப் போல் வரைந்து தரும்படி கோரினோம். சிறுவர்கள் உற்சாகத்துடன் தங்களது கனவுகளை கணிகளாக மரத்தினில் வரைந்தனர். தங்கள் ஊருக்கு தரமான சாலைவசதி வேண்டும், 12 வது வரை பள்ளி வர வேண்டும், அழகிய பூந்தோட்டம் ,மதில்சுவர், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பள்ளி வளாகம் வேண்டும், விளையாட்டு ஆசிரியர் வேண்டும், நூலகம் வேண்டும், ஆசிரியராக வேண்டும்,போலிஸ், விவசாயி, பொறியியலாளர், டாக்டர், மிலிட்ரி என பல்வேறு கனவுகளை கணிகளாக தொங்க வைத்தனர்.
மாணவர்கள் வரைவதை ஒருங்கிணைக்கும் மகேஸ்,அஸ்லம் மற்றும் பெருமாள் ஆகியோர்.

கனவு மரத்தின் கணிகளாக தமது எதிர்காலக் கனவுகளை சொல்லும் குழந்தைகள்
 அதன் பின்னர் இந்த கணிகள் காய்க்கும் மரத்திற்கு தண்டு போல் உங்கள் கனவுகள் நனவாக யார் துணை இருப்பார்கள் என கேட்கப் பட்டது. அதற்கு அரசு, ஆசிரியர்கள், தாய் தந்தையர், பொது பணி நிறுவனங்கள், பொது மக்கள் என பல்வேறு பட்ட அமைப்புக்களை அடையாளப் படுத்தினர். அதன்பின்னர் உங்கள் கனவுகள் நிறைவேறவும், மேற் குறிப்பிட்டவர்கள் துணை நிற்க வேண்டுமென்றால் இந்த மரத்துக்கு ஆணி வேராக எவை இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. பல நிமிட யோசனைக்கு பின் ஒருவர் பின் ஒருவராக திறமை, விடாமுயற்சி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் என பல்வேறு விடையங்களை முன்வைத்தனர். அவர்கள் சொல்லியதன் மூலம் அவர்கள் கானும் கனவுக் கணிகளைப் காய்க்கவைக்க உதவும் தண்டுகளாக உறுதுணை நிற்பவர்களையும், அதன் வேர்களாக தங்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் அவர்கள் இனம் கண்டிருந்தனர்.

பருவகால வரைபடம் (Seasonal Diagram):
 பருவகால வரைபடம் ஒரு மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் தொடர்ச்சியான நடைமுறைகளைப் பற்றியும் இலகுவில் தெரிந்து கொள்ள பருவகால வரைபடத்தை தவிர வெகு இலகுவாக சொல்லிவிட எதனாலும் முடியாது. அந்த வகையில் அங்குள்ள மக்களிடம் கேட்டு அவர்கள் தங்களுக்கு தாங்களே வரைந்து கொண்ட பருவ கால வரைபடம் இது. பருவ கால வரைபடம் என்பது வருடத்தில் உள்ள மாதங்களை குறிப்பிட்டு ஒவ்வொரு மாத காலப் பகுதியிலும் அவர்கள் ஊரில் நடைபெறும் நிகழ்வுகளைக் குறிப்பதாக அமைந்திருக்கும்.

வாழ்வாதாரம்:

இந்த வகையில் இவர்களிடம் அவர்கள் பிரதான வாழ்வாதாரம் பற்றிக் கேட்ட போது வருடத்தின் சிறு போகம் பெரும் போகம் என இரு காலப் பகுதிகளில் மழையை நம்பிய பயிர்வளர்ப்பில் ஈடுபடுவதாக கூறினர் முதல் போகம் ஆடி மாதம் உழுது ராகி மற்றும் மக்காச்சோளம் பயிரிடப் படுவதாக கூறினர். ஆடி மாத ஆரம்பத்தில் மழைய நம்பி விதைக்கப்ப்படும் இப்பயிர் கார்த்திகை மற்றும் மார்கழி மாதப் பகுதியில் அறுவடை செய்யப் படுகின்றது. இதன் பொருள் ஈட்டும் காலம் தைமாதத்தில் ஆரம்பிக்கின்றது. தை மாதத்தில்தான் தாணியங்களை விற்பனை செய்கின்றனர். இருந்த போதும் இவர்கள் ராகி (குரக்கன்) அரிசியினை விற்பனைக்காக விதைக்காமல் பெரும்பாலும் தமது சுயதேவைப் பூர்த்திக்காக விதைப்பதாக கூறுகின்றனர்.

பருவகால வரைபடம் உருவாக்குதல்
இரண்டாவது போகமாக பயறு மற்றும் பீன்ஸ், காரட் தானியம் மற்றும் காய்கறிப் பயிர்கள் நடவு செய்யும் காலமாக தை,மாசி மாதங்கள் காணப் படுகின்றது. இந்த காலங்களில் பயிரிடப்படும் பொருட்கள் பெரும்பாலும் வைகாசி, ஆனி மாதங்களில் அறுவைடை செய்யப் படுகின்றன. எனவே இவர்களின் கையில் பணம் இருக்கும் காலங்களாக தை மற்றும், வைகாசி, ஆனி மாதங்களைக் கூறுகின்றனர். அதே போல் காட்டுத்தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் தை மாதத்தில் நெல்லி, கடுக்காய் போன்றவைகளையும் சித்திரை வைகாசி போன்ற மாதங்களில் மலைத்தேன் போன்றவைகளையும் பெருமளவில் கொள்வனவு செய்கின்றனர்.

கலாச்சாரம் சடங்குகள்:

இவர்கள் தங்களின் பயிர் அறுவடைக்குப் பின்னரான காலப் பகுதிகளில் தமது கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண சுபகாரியங்களை வைத்துள்ளனர். அந்த வகையில் அங்கு அமைந்திருக்கும் ஜடையர் சுவாமி, வேடர் கண்ணப்பா ஆலையத்தின் திருவிழா தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.மற்றைய இரு கோயில் திருவிழாக்கள் பங்குனி மாதத்தில் வைத்துள்ளனர். அதே போல் வைகாசி மாதத்தில் அவர்கள் தமது திருமண சுப காரியங்களை மேற்கொள்கின்றனர்.

இடர் நிறைந்த காலப் பகுதி:
பருவகால வரைபடம்
பொதுவாக விவசாயத்தில் ஈடுபடுவோர்க்கு பயிரிட்ட பின்னரான காலப்பகுதி யில் பொருளாதார சிக்கல் ஏற்படும் இந்த காலங்களில் இவர்களில் பெரும் பாலானோர் கரும்பு வெட்டுதல் மற்றும் கூலி வேலைக்காக வெளியிடங்களுக்கு சென்று தங்கி இருந்து வேலை செய்கின்றனர் இது பொதுவாக ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மாதங்களில் நிகழ்கின்றனர். அதே போல் மழைகாலமாக காணப்படும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இங்குள்ள குழந்தைகள் வைரஸ் காய்ச்சல், சளிக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர் எனக் குறிப்பிட்டனர்.

கிராம வள ஆதார வரைபடம்(Area Resource Map) :

கிராம வள வரைபடம்
மக்களிடையே பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் தூண்டுதலின் பேரிலையே அவர்கள் இடத்தினை வரைபடமாக்கும் எண்ணத்தினை வரவழைத்தோம்.பெரியவர்கள் தமது கிராமத்து இடங்களை எடுத்துக்கூற  இளம் பெண்கள் சிறுவர்கள் அங்கிருந்த வண்ணப் பொடிகளால் கிராமத்துக்கான வரை படத்தினை அமைத்தனர், அதில் எங்கிருந்து எங்குவரை  பிரதான வீதி செல்கின்றது, அருகில் ஓடும் ஓடை எப்படி வளைந்து செல்கின்றது, காட்டு மரங்கள் மலைப்பகுதிகள் கிராமத்துக்கு எத்திசையில் காணப் படுகின்றது என்பதை பெரியவர்கள் வரைபடத்தில் அடையாளமிட அதற்கு சிறுவர்களும் பெண்களும் வடிவம் கொடுத்தனர், அடுத்ததாக அவர்களது முக்கிய வளங்கள் அமைந்துள்ள பகுதிகளைக் குறிக்கும் படி கோரினோம் அதன் படி பள்ளிக் கூடம், சுகாதாரவளாகம், வனத்துறை அலுவலகம், குடிநீர்த் தொட்டிகள், குடிநீர்க் குழாய்கள் அமைந்துள்ள இடங்களை வரைபடத்தில் குறித்தனர். அதன் பின்னர் பயிர் செய்யும் நிலப்பரப்பு , வீட்டுக் குடியிருப்புக்கள், மின்கம்பங்கள், கடைகள், கோயில்கள் போன்றவற்றை குறிப்பிட்டனர், பின்னர் அடுத்த ஊருக்கு செல்லும் வழிகள், மக்கள் கூடும் பொது இடங்கள் போன்றவை குறிக்கப்பட்டது. இவைகள் ஒவ்வொன்றையும் குறிக்கும் போது விடுபட்டவற்றை மற்றவர்கள் சொல்ல உடன் இருப்பவர்கள் அவற்றைச் சரி செய்தனர்.
கிராம வரைபடத்தினை பெரியவர்கள் வழிகாட்ட வரையும் பள்ளி மாணவிகள்
இரு நாட்கள் நடைபெற்ற இந்த மக்களின் பங்களிப்புடன் கூடிய கிராம பகுப்பாய்வு அவர்களின் வளங்களையும், வாழ்வாதாரங்களையும், வாழ்வியல் முறைமைகளையும் அவர்கள் வழியாக எமக்கும் அவ்ர்களுக்கு ஒரு மலரும் நினைவாகவும் அமைந்தது என்பதில் ஆச்சரியம் இல்லை.

No comments:

Post a Comment