Monday 19 November 2012

இளஞ்சிறார் நீதிச்சட்டம் மற்றும் குழந்தைகள் நலன் குறித்த கருத்தரங்கு-Awareness Workshop on Juvenile Justice Act& Child Welfare Commitee-For NGO Directors and Child Safety Officers of Erode and Thirupur Districts-Skills India



”குழந்தைப்பருவம்” மனிதர்கள் எல்லோரும் கள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளங்களாக இருக்கின்ற பருவம்… இவர்கள் எல்லோரும் இந்த உலகத்தில் பேணிப் பாதுகாக்க வேண்டிய வருங்காலச் செல்வங்கள்… ஆனால் இந்த குழந்தைகள் எல்லோரும் பாதுகாப்பான சூழலில் தாய் தந்தையருடன் வாழும் சாதாரண வாழ்க்கை முறை அமைந்து விடுவதில்லை..

சில சிறுவர்கள் என்னவென்று புரிந்து கொள்ளாமலே தவறுகளையும் குற்றங்களையும் செய்டுவிட்டு சீர்திருத்தப் பள்ளிகளிலும் தாய் தந்தை இல்லாத ஆதரவற்ற நிலையில் கருணை இல்லங்களிலும் வளர்க்கப் படுகின்றன.. குழந்தைகளைக் காப்பதற்கும் அவர்களைச் சீர்படுத்துவதற்கும் இந்த இல்லங்களும் சீர் திருத்தப் பள்ளிகள் இருந்தாலும் இவற்றில் வாழும் குழந்தைகள் எவ்வாறு இருக்கின்றார்கள்  என்பது பற்றிய அக்கறை அரசுக்கும் குழந்தைகள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் எல்லோர் மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றது.

 அந்த வகையில் கடந்த மாதம் திருப்பூர் சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அலுவலகத்தின் மாவட்ட இயக்குனர் திரு. சரவணன் அவர்களைச் சந்திக்க நேர்ந்த இடத்தில் இது பற்றிக் கேட்ட போது குழந்தைகளுக்காக பணி புரியும் எல்லோருக்கும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பாகவும், இல்லங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகள் தொடர்பாக மத்திய அரசில் இருக்கும் சட்டங்கள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிய போது இதற்காக அவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்யலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
நிகழ்வுக்கு வருகைதந்த மாவட்ட முதன்மை நடுவர் மதிப்புக்குரிய ராமச்சந்திரன் அவர்கள்

அந்த வகையில் கடந்த 07.11.2012 அன்று திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு தண்ணீர் பந்தல் பகுதியில் அமைந்துள்ள மரியாலயா குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது… இந்த நிகழ்விற்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் இல்லங்கள் நடத்தி வருபவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பணிபுரிவோர் என பல தரப்பில் இருந்தும் ஸ்கில்ஸ் இந்தியா (SKILLS INDIA) சார்பிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அலுவலகத்தின்  சார்பிலும் அழைக்கப்பட்டிருந்தனர்..

 மொத்தமாக 23 தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 45 பேரும் குழந்தைகள் நலப் பணியாளர்கள் 15 பேரும் கலந்து கொண்டனர். மரியாலையாவின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நடுவர் உயர்திரு.ராமச்சந்திரன் அவர்கள் (குற்றவியல் நீதிமன்றம்-I)கலந்து கொண்டு குத்துவிளக்கினை ஏற்றி ஆரம்பித்து வைத்தார் திருமதி நாகப்பிரபா மாவட்ட சமுக நல அலுவலகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்..நிகழ்வினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சிவராஜ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

முதன்மை நடுவர் தலைமை உரையாற்றுகிறார்
தலைமை உரையாற்றிய முதன்மை நடுவர் அவர்கள் இளஞ்சிறார் நீதிச்சட்டம் பற்றி எல்லோருக்கும் விளக்கம் அளித்தார். சட்டத்தின் படி 18 வயதுக்கு கீழ் உள்ள அனைவரும் குழந்தைகள் அவர்கள் சில நேரங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அவர்களை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக எல்லோருக்கும் விளக்கினார். அவர்கள் எப்படி நடத்தப்படவேண்டும் என்று சட்டத்தில் உள்ள ஒவ்வொன்றையும் விளக்கினார். தொடர்ந்து பேசிய மாவட்ட சமூக நல அலுவகர் திருமதி.நாகபிரபா அவர்கள் சமுகநலத்துறையுடன் இங்கு செயற்படும் இல்லங்கள் அனைத்தும் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார்.

மாவட்ட சமூக நல அலுவலகர் திருமதி நாகப்பிரபா அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்
Skills India ஒருங்கிணைப்பாளர் திரு.நா.சிறிதரன் விளக்கவுரை வழங்குகிறார்
ஸ்கில்ஸ் இந்தியாவின் சார்பில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் திரு,சிறிதரன் அவர்கள் இந்த கலந்தாய்வினை ஏற்பாடு செய்ததன் அவசியத்தை விளக்கினார், குழந்தைகள் நலன் தொடர்பாகவும் சமூக பிரச்சனைகள் தொடர்பாக ஸ்கில்ஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகளை விளக்கினார்.

அவர்கள் உரையினைத் தொடர்ந்து கருத்தரங்கின் கருத்துரையாளர்களாக திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அலுவலகர் திரு.த.சரவணன் அவர்களும், ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அலுவலர் திருமதி.தேவகி ஆகிய இருவரும் பயிற்சி வகுப்பினை ஆரம்பித்தனர், குழந்தைகளுக்கான ஐக்கியநாடுகள் சபையின் அங்கிகரிக்கப்பட்ட உரிமைகள், குழந்தை உரிமைச் சட்டங்கள் மத்திய மாநில அரசுகள் குழந்தைகள் பராமரிப்பு தொடர்பாக கொண்டுவந்துள்ள சட்டங்கள், பரிந்துரைகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.


திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அலுவலகர்கள் திரு.சரவணன்,திருமதி.தேவகி ஆகியோர் கருத்தரங்கினை நடத்துகின்றனர்
மதிய உணவின் பின்னர் குழந்தைகள் உரிமை தொடர்பான குறும்படம் காட்சிப் படுத்தப்பட்டது. பின்னர் கலந்து கொண்ட தொண்டு நிறுவனங்கள் தங்களின் சந்தேகங்களையும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக CWC மற்றும் DCPS ஆகியவை எவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றது என்ற விளக்கத்தினை கேட்டறிந்தனர், அதற்கான பதில்களை கருத்தரங்கின் கருத்துரையாளர்களான  நன்னடத்தை அலுவலகர் திரு.த.சரவணன் அவர்களும்,  நன்னடத்தை அலுவலர் திருமதி.தேவகி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
குழந்தைகள் உரிமைகள் தொடர்பான குறும்படங்கள் காட்சிப்படுத்தல்


மாலை தேனிர் இடைவேளையின் பின்னரான கருத்து கேட்பில் கலந்து கொண்ட தொண்டு நிறுவங்களின் சார்பாக பலர் தங்களுக்கு இந்த கருத்தரங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கூறினர், இதன் பேரில் நடத்துவதற்கு சமூக நலத்துறையும் தங்களுக்கு பக்கபலமாக செயற்பட வேண்டும் என்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தங்களின் மேலான செயற்பாட்டினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். ஸ்கில்ஸ் இந்தியாவின் சார்பில் திரு.அருன் அவர்களும் CWC சார்பில் திரு. ராஜசேகர் ஆகியோர் நன்றி கூறி கருத்தரங்கினை நிறைவு செய்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள்

No comments:

Post a Comment