Saturday 27 October 2018

ஈரோடு-புனிதாவின் வாழ்வில் தொழில் திறன் கல்வி ஏற்படுத்திய மாற்றம்.

என் பெயர் புனிதா, வயது -28 , நான் ஈரோடு மாவட்டம் நகரப் பகுதியின் குமாரசாமி தெருவில் வசித்து வருகிறேன். பள்ளிப் படிப்பை முடித்து லாப் டெக்னிசியன் படிப்பில் சேர்ந்து படிப்பை முடித்தேன் ஆனால் படிப்பிற்கு ஏற்ற வேலை அமையவில்லை.  

என் கணவர் கடை ஒன்றில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார் , ஆண் , பெண் என இரு கைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு அன்றாட செலவுகளுக்கு அவஸ்தைப்படும் நிலையில் எனது படிப்பிற்கான வேலை தேடி எங்கு அலைந்தும் கிடைக்க வில்லை அந்த நிலையில் ஈரோடு மாவட்டம் ப்ரப் ரோட்டில்  CSI வளாகத்தில் இயங்கிவரும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசனில்   PMKVY பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது குறித்து தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்தேன்.

அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று மையத்தின் நிர்வாகி ஸ்டீபன் ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படி உதவி அழகுகலை நிபுணர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து 3 மாதகாலம் (290 மணி நேர பயிற்சி) பயிற்சியில் கலந்து கொண்டேன் , பயிற்சிக்காலத்தில் தொழில்முனைவோருக்கான பயிற்சி , திறன் போட்டிகள் , கலை நிகழ்வுகள் என அனைத்து நிகழ்வுகளும் சிறப்பான முறையில் நடந்தது  மறுபடியும் சில காலம் கல்லூரியில் படித்தது போன்று உணர்வு.

பயிற்சியின்  போது எனது அழகுக்கலை பயிற்சி ஆசிரியர் திருமதி.வாஹிதா பேஹம் அவர்கள் எங்கள் அனைவருக்கும் திறன்பட அனைத்து வகையான தெரப்பிகள் மற்றும் அலங்காரங்களையும் கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து பின்னர் பயிற்சி வளாக மையத்தில் நடபெற்ற வேலைவாய்ப்பு தேர்வில் தெரிவாகி தற்போது  ஈரோடு நகரப் பகுதியில் இயங்கிவரும் சஹானா பியூட்டி பார்லரில் மாதம் ஒன்றிற்கு 6000/- ரூபாய் வருமானத்துடன் பணியில் இருக்கிறேன். 

என் குடும்ப சூழ்நிலையில் எனது வேலையும் வருமானமும் எனக்கு மிகப்பெரும் பங்களிப்பாகவும் என் எதிர்காலத்தில் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்படின் சுயமாக தொழிலை ஆரம்பித்து செய்யும் அளவிற்கு திறமை உள்ளவளாகவும் இந்த தொழிற் பயிற்சி  மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.

இப்போது என்னுடைய வருமானத்தைக் கொண்டும் என் வீட்டின் அன்றாட செலவுகளை  செய்வதை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்த பயிற்சியினை வழங்கிய ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் ஈரோடு பயிற்சி மையத்திற்கும் , மைய நிர்வாகி ஸ்டீபன் ராஜ் சார் அவர்களுக்கும், பயிற்சி ஆசிரியர் வாஹிதா பேஹம் அவர்களுக்கும் , வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி அம்சா மேடம் அவர்களுக்கும் மத்திய அரசின்  திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


No comments:

Post a Comment