Thursday 25 October 2018

ராஜபாளையம்-திருமதி கனகமணி- சுய தொழில் முனைவோரான வெற்றிக் கதை.

 “உங்களால் கனவு காணமுடிந்தால் அதை செய்து காட்டவும் உங்களால் முடியும்”

திருமதி கனகமணியின்  சுயதொழில் வெற்றிக் கதையின் சாரம் இதுதான். அவரது வெற்றிக் கதை குறித்து கூறியது..

என் பெயர் கனகமணி,  வயது- 31 ,விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள கிருஸ்ணாபுரம் என்னும் ஊரில் வசித்து வருகிற் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து  6 ம் வகுப்பு வரை கல்வி கற்றிருக்கிறேன். இளமையிலே திருமணம் ஆகி 2 பிள்ளைகளுக்கு அம்மா என்பதை தவிர எனக்கான அடையாளம் என்று எதுவும் இல்லாத வாழ்க்கை, கணவர் தினக் கூலி வேலை செய்பவர் அவரது வருமானத்தில் 4 பேர் கொண்ட எங்கள் குடும்பத்தின் செலவை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் , எனக்கும் ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ,ஆனால் அதற்கான சரியான வழிகாட்டலோ, தொழிலோ இல்லாத நிலையில் இருந்து வந்தேன்.

அந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம்-2018 எங்கள்  ஊருக்கு ராஜபாளையம் சங்கரன் கோவில் வீதியில் செயல்பட்டுவரும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன்  தொழில் பயிற்சி மையத்தில் இருந்து  மத்திய அரசின் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டம் பற்றி எடுத்துக் கூற மையத்தின் மக்கள் பயிற்சி ஒருங்கிணைப்பு குழுவினர் வந்து இருந்தனர்.

அவர்களின் வழிகாட்டுதலுடன் மத்திய அரசின்  PMKVY திட்டத்தில் நான் சுயதொழில் தையல் பயிற்சியில் 16-02-2018 அன்று இணைந்து கொண்டேன். 380 மணி நேரம் கொண்ட 3 மாதகாலப் பயிற்சியில் தையல் ஆசிரியர் திருமதி கவிதா அவர்கள் அடிப்படைத் தையலில் இருந்து அனைத்து தையல் வகைகளையும் ,எல்லா வகையான ஆடைகள் அளவு எடுத்தல், வெட்டுதல் ,தைத்தல் ,எம்ப்ரோய்டரி என அனைத்தையும் திறன்பட கற்றுக் கொடுத்தார்.
பயிற்சியின் முடிவில் நண்பர்களோடு எடுத்துக்கொண்ட படம்.

என்னுடன் பயிற்சியில் கலந்து கொண்ட சங்கிலிவீரா , முத்துலக்சுமி நல்ல நண்பர்கள் ஆனார்கள், பயிற்சியின் போது நடைபெற்ற யோகா பயிற்சிகள் ,கலை நிகழ்ச்சிகள் ,கோலப் போட்டி , தொழில் முனைவோர் பயிற்சி என பள்ளிக் கால படிப்பை படித்து முடித்ததைப் போல ஒர் மகிழ்ச்சி. பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படும் சான்றிதலைப் பெற்றுக்கொண்டேன். 

இன்று நான் கற்றுக் கொண்ட தையல் பயிற்சியின் மூலம் வீட்டில் இருந்தே மாதம் ஒன்றிற்கு 7500 ரூபாய் வரை வருமானமாக பெற்றுவருகிறேன், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தேவையான உடைகளை நானே தைத்துக் கொள்வதால் செலவுகள் குறைகிறது, என்னையும் என்னை போன்று பயிற்சியில் கலந்து கொண்ட நண்பர்களின் வாழ்கையிலும் மாற்றத்தைக் கொண்டுவந்த  பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள், அத்துடன்  எனக்கு பயிற்சி அளித்த ஸ்கில்ஸ் இந்தியா ராஜபாளையம் பயிற்சி மையத்திற்கும் அதன் நிர்வாக தலைவர் மணிவண்ணன் சார்  ,ஒருங்கிணைப்பாளர் சுபா மேடம், பயிற்சி ஆசிரியர் கவிதா மேடம் ஆகியோருக்கும் நன்றிகள். 

என்னைப் போல்  ஏழ்மை நிலையில் இருக்கும்  இன்னும் பலரது வாழ்வு நிலை மாற உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment